பெர்னாட்ஷா - Lakshmi RS



அயர்லாந்தில் உள்ள டப்ளின் நகரில் பிறந்தவர்...
நாவல் ஆசிரியர்...
மிகச் சிறந்த நாடக ஆசிரியர்,
திறனாய்வாளர்...
நகைச்சுவையாளர்...
விமர்சகர்...
இறை மறுப்பாளர்…
புத்தி கூர்மைமிக்க நகைச்சுவை கிண்டல்காரர்...
மத கோட்பாடுகளுக்கு எதிரானவர்…
அரசியல் ஆர்வலர்…
பேச்சாளர்....
மேதை என பலராலும் புகழப்படுகிறவர்...
கார்ல் மார்க்ஸின் பொதுவுடைமைத் தத்துவத்தால் பெரிதும் கவரப்பட்டு பேபியன் கழகம்  என்ற அமைப்பில் சேர்ந்து சோஷலிசக் கருத்துகளை பரப்பியவர்... 

தனது 94 வயது வரை எழுதியவர்....

நோபல் பரிசு பெற்று உலக இலக்கிய வரலாற்றில் தனக்கென ஒரு பெயரை தக்க வைத்துக் கொண்டவர் ...

அவர்தான் “ஷா” என ஒற்றை எழுத்தில் அனைவராலும் அழைக்கப்படும்  மாமேதை பெர்னார்ட் ஷா..

தனது நாடகங்களில் சமூக தீமைகளைச் சாடியவர்..

சிரிப்பு கேலி கிண்டல் உணர்வுகள் பிரதிபலிக்க எழுதுபவர், பேசுபவர்....

ஒரு சமயம் ஆங்கில நடிகை ஒருவர் ஷாவைப் பார்த்து  நாம் ஏன் திருமணம் செய்யக் கூடாது ? உங்களைப் போன்ற அறிவுடனும் என்னைப் போன்ற அழகுடனும் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை என்கிறாள்..
உடன் தாமதிக்காது  ஷா கேட்கிறார்,” உங்களைப் போன்று அறிவுடனும், என்னைப் போன்று அழகுடனும் பிறந்து விட்டால் என்ன செய்வது என்று கேட்டதும் அந்த நடிகையின் முகம் போன போக்கை கற்பனை செய்து கொள்ளலாம்…

ஆங்கில அறிஞர் ஜி கே செஸ்டர்டன் பருத்த உடல்வாகு கொண்டவர்.ஷாவோ மெலிந்த
தேகமுடையவர்..செஸ்டர்டன் இவரைப் பார்த்து கேலி செய்கிறார், “உங்களைப் பார்க்கும் யாவரும் இங்கிலாந்தில் பஞ்சம் வந்து விட்டதாகத்தான்  நினைப்பார்கள்” உடன் ஷா சொல்கிறார், உம்மைப் பார்த்தால் அந்த பஞ்சத்திற்கு காரணமும் அவர்களுக்கு புரிந்து விடும்..” என்று பதிலடி கொடுக்கிறார்…

ஷாவை அமெரிக்காவிற்கு அழைத்திருந்தார்கள், செனட்டர்கள் கூட்டத்தில் பேசுவதற்காக…
பேச ஆரம்பிக்கையிலேயே, அமெரிக்கர்களில் 50 சதவிகிதம் முட்டாள்கள் என்றார். கடும் எதிப்பு கூட்டத்திலிருந்து….நீங்கள் சொன்னதை வாபஸ் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கத்துகிறார்கள்..”ஆகா வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். அமெரிக்கர்களில் 50 சதவிகிதம் புத்திசாலிகள் “ என்று சொல்லி விட்டு அமர்ந்தார்… 

ஒருமுறை நகரும் படிகட்டுகளில் மாட்டிக்கொண்டு தலைகுப்புற கீழ் விழுகிறார் ஷா.. மக்கள் பதறிக் கொண்டு பக்கம் வருகிறார்கள்.. எழுந்து நின்று அவர்களைப்  பார்த்து புன்னகைத்த படியே அவர்களை கடந்து செல்கிறார் ஷா, இம்மனிதனுக்கு  இவ்வாறு விழுவது இயல்புதானோ என அவர்கள் நினைக்கும்வண்ணம்…

60 நாடகங்கள், 5 நாவல்கள், சில கட்டுரைகள், அரசியல் பொருளாதாரம், கலை தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகள், ஆயிரக்கணக்கில் கடிதங்கள் என எழுதிக் குவித்தார். ஆனாலும் அவர் எழுதிய நாடகங்களுக்காகவும், அவரது வித்தியாசமான சிந்தனைக்காகவுமே அவர் சிலாகிக்கப் படுகிறார், மேதை என உணரப் படுகிறார் ..

Arms and the Man அவரது முதல் நாடகம்..Man and superman, , Major Barbara, The doctors dilemma, Ceasar and Cleopatra, Pygmalion, Saint John என தொடர்ந்து அவரது நாடகங்கள் வெற்றி பெற்றன..

இவரைப் பற்றி படிக்கையில் எழுதுகையில் இருவர் மட்டுமே நினைவுக்கு வருகிறார்கள்..
ஒருவர் தென்னாட்டு பெர்னார்ட்ஷா என அழைக்கப்படும் அறிஞர் அண்ணா..
மற்றொருவர் கலைஞர் கருணாநிதி…

இன்று ஷா வின் பிறந்த நாள்…
Previous Post Next Post

نموذج الاتصال