நல்ல அம்மா நல்ல பிள்ளை – 1 - ஆதனூர் சோழன்



தூக்கம் நன்று

வாழ்க்கைமுறை வேகமாக மாறி வருகிறது.

உணவுப் பழக்க வழக்கங்களும் மாறிவிட்டது.

இந்நிலையில், தூக்கமும் சவாலான விஷயமாக மாறிவிட்டது.

புதிதாக குழந்தையைப் பிரசவிக்கும் பெண்களுக்கு தூக்கம் என்பது இயலாத காரியமாகி விட்டது. அதற்காக, தாய்மை அடைவதை தவிர்க்க முடியுமா?

அல்லது, குழந்தை பிறந்த பின், சில மணி நேரங்களுக்கு ஒரு முறை பால் புகட்டுவதை தள்ளிப் போடமுடியுமா?

பெண்கள், தினமும் இரவு நேரங்களில் குறைந்தது 7 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம். இதில் ஒரு மணி நேரம் குறைந்தாலும், அடுத்த நாள் விழிப்பு நிலையில் 25 சதவீத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பெண்கள் மட்டுமில்லை. ஆண்களில் பலரும் தூக்கமின் மையால் அவதிப்படுகின்றனர்.

அவர்களுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்க கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையின் மகப்பேறு மருத்து வர் ஜேம்ஸ் ஸ்மித் பத்து வழிகளை வகுத்துள்ளார்.

இந்த வழிகளைப் பின்பற்றினால், அதிக நேரம் தூங்க முடிவதுடன், ஆழ்ந்த தூக்கமும் கிடைக்கும் என்று அவர் கூறுகிறார்.

அந்த வழிகள் இதோ…

1. இரவில் தூங்கப் போகும் நேரத்தை தினமும் ஒரே மாதிரியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

2. புகைபிடிக்கக் கூடாது. பொதுவாக, புகைபிடிப்பவர் களுக்கு ஆழ்ந்த தூக்கம் இருக்காது. நிக்கோடின் குறைந்துவிடு வதால், 3 அல்லது 4 மணி நேரத்துக்கு ஒரு முறை விழிப்பு வந்துவிடும்.

3. இரவு நேரங்களில் மது அருந்தக் கூடாது. மது அருந்தினால், தூக்கம் வருவது போல் ஒரு மாயத்தோற்றம் இருக்கும். ஆனால், மதுப்பழக்கம் ஆழ்ந்த தூக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை.

4. தூங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் காபி, டீ, சோடா, சாக்லெட், வலி நிவாரணிகளை சாப்பிடக் கூடாது. (சில நிபுணர்கள், பிற்பகலுக்குப் பின் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுரை வழங்குகின்றனர்.)

5. பகல் நேரத்தில் உடற்பயிற்சி செய்யுங்கள். இதன்மூலம், இரவில் அருமையான தூக்கம் கிடைக்கும். உடற்பயிற்சிகளை இரவு நேரங்களில் செய்யக் கூடாது. அட்ரெனலின் சுரப்பி வேகமாக செயல்படும்போது நிம்மதியாக தூங்க முடியாது.

6. தூங்கப் போகும்போது, வயிறை காலியாகவோ, அதிக அளவில் நிரப்பியோ வைத்திருக்கக் கூடாது. தூங்குவதற்கு முன் லேசான நொறுக்குத் தீனிகளை சாப்பிடலாம்.

7. படுக்கையில் இருக்கும்போது லேசான பருத்தி ஆடைகளையே அணியவும். இது கவர்ச்சியாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். சிறந்த தூக்கத்துக்கு பருத்தித் துணிகள் வழி ஏற்படுத்தும்.

8. படுக்கை அறையை குளுமையாக வைத்திருங்கள். வெப்பநிலையை 70 டிகிரி பாரன்ஹீட் அளவில் வைத்திருப்பது நல்லது என்று அமெரிக்க தூக்கவியல் நிபுணர் நீல் கிலின் கூறுகிறார்.

9. படுக்கை அறையை அமைதியாகவும், இருளாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். தூங்கும்போது தொலைக்காட்சியை அணைத்துவிட வேண்டும். சிறிது சத்தம் இருந்தால் தான் தூக்கம் வரும் என்ற நிலையில் இருப்போர், மின்விசிறியை இயங்கச் செய்யலாம்.

10. தூங்கச் செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பிருந்தே மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் குறுக்கெழுத்துப் போட்டிகளை படிக்கலாம் அல்லது குளிக்கலாம். மாறாக, உணவு அருந்துவது, குடும்பப் பிரச்சினைகளைப் பற்றி சிந்திப்பது ஆகிய செயல்களில் ஈடுபடக் கூடாது.

சரியான தூக்கம் இல்லாவிட்டால்…

நமது உடலில் சக்தியை ஏற்படுத்துவதற்கு ஓய்வு அவசியம். போதிய அளவில் ஓய்வு எடுத்துக் கொள்ளத் தவறினால், மனதில் எரிச்சல் ஏற்படும். சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே, சரியான அளவில் தூங்க முயற்சிக்க வேண்டும். அவ்வாறு தூங்கவில்லை என்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நிபுணர்கள் பட்டியலிட்டு உள்ளனர்.

சோம்பலாக இருக்கும்போது, நமது உடலில் தேவையான அளவில் சக்தி இருக்காது. சக்தியைப் பெறுவதற்காக கார்போஹைட்ரேட்டுகளை உடல் எடுக்கும். இதையடுத்து, உடல் எடை அதிகரித்து பிரச்சினைகள் ஏற்படும்.

தூக்கமின்மையால் பொறுமையை இழந்துவிடுவோம். போதிய அளவில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடும். தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் 1 லட்சம் விபத்துகள் வாகன ஓட்டுநர்களின் சோர்வு காரணமாக ஏற்படுவதாக தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு கூறுகிறது.

சரியான தூக்கம் இல்லாவிட்டால், ஞாபக சக்தி குறையும் என்று ஹார்வர்டு பெண்கள் சுகாதார அமைப்பு கூறுகிறது.

தூக்கத்தின் நிலைகள் எத்தனை?

தூக்கம் என்பது, 5 நிலைகளைக் கொண்டது. இது 90 முதல் 110 நிமிடங்கள் வரை நீடிக்கிறது. படுக்கையில் படுத்தவுடன், லேசான அளவில் தூக்கம் இருக்கும். இது முதல் கட்டமாகும். இதற்கு அடுத்த நிலையில், மூளை அதிர்வுகள் இயங்கும் வேகம் குறையும். இதன் மூலம் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். மூன்றாவது மற்றும் நான்காவது நிலையில், மிகவும் ஆழ்ந்த நிலையிலான தூக்கம் இருக்கும். அப்போது முழு ஓய்வு கிடைக்கிறது.

கடைசி நிலையில், கண்களின் அசைவு வேகமாக இருக்கும். அப்போது, மூச்சு விடுவது அதிகரித்தும், இதயத் துடிப்பு குறைந்தும், கண்கள் வேகமாக சுழன்றபடியும் இருக்கும். அப்போதுதான் கனவு வருகிறது. இந்த 5 நிலைகளில், 3ஆவது மற்றும் 4ஆவது நிலையிலேயே நாம் இருப்பது நல்லது.

குழந்தை பெற்ற தாய்மார்கள் கவனத்துக்கு…

குழந்தையைப் பிரசவித்த பெண்கள், ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது, குழந்தை அழுதால் உடனடியாக எழுந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இது சிரமமானது. எனவே, பெண்கள் தூங்கும்போது குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேறொருவரை இருக்கச் செய்வது நல்லது. அல்லது, குழந்தை தூங்குகின்ற நேரத்தில், பெண்கள் தூங்கினால், மிகவும் நல்லது.

Previous Post Next Post

نموذج الاتصال