தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு சார்பில் உலகளாவி முதல் திருக்குறள் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. வீரமாமுனிவர் பிறந்தநாளில் தென்கொரியா தலைநகர் சியோலில் 100-க்கும் மேற்பட்ட அறிஞர்கள் கூடி திருக்குறளின் பெருமையை உலகிற்கு உணர்த்தினர். இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுசார் பணிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சார வரலாற்றில் ஒரு மைல்கல்லாக,
தென்கொரியாவின் தலைநகர் சியோலில் முதல் முறையாக "உலகளாவிய திருக்குறள் மாநாடு"
(ITCSK 2025) வெற்றிகரமாக நடைபெற்றது. தென்கொரியா வரலாற்றில் முதன்முதலாக நடைபெறும்
தமிழ் மாநாடு என்ற பெருமையைப் பெற்ற இந்நிகழ்வு, சேஜோங் பல்கலைக்கழகத்தில் நவம்பர்
8ம் தேதி நடைபெற்றது.
மாநாடு நடந்த நவம்பர்
8ம் நாளானது திருக்குறளை முதன்முதலில் ஐரோப்பிய மொழியான லத்தீனில் 1730ம் ஆண்டு மொழிபெயர்த்த
இத்தாலிய ஆய்வாளர் ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்) அவர்களின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் இருந்து குவிந்த அறிஞர்கள்
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சிறப்பு
பாராட்டு
மாநாட்டின் சிறப்பம்சமாக,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுப் பட்டயமும் பாராட்டுக்
கேடயமும் வழங்கப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரிய மொழியை விருப்பப் பாடமாக
அறிமுகப்படுத்தியதற்காகவும், "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் SCOUT முயற்சியின்
மூலம் ஆறு இந்திய மாணவர்களை தென்கொரியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் இரண்டு வார
ஆராய்ச்சி அனுபவத்திற்கு அனுப்பியதற்காகவும் இந்த பாராட்டு வழங்கப்பட்டது.
இந்தியாவிற்கும்
தென்கொரியாவிற்குமான உறவை கல்வி மூலம் பலப்படுத்தும் தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப்
பார்வையை இந்த விருது மதிப்பளிக்கிறது என்று மாநாட்டு அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
தமிழ் மொழி சேவையாளர்களுக்கு கெளரவம்
மாநாட்டில் தமிழ்
மொழி மற்றும் இலக்கியத்திற்கு சிறப்பான பணியாற்றிய பலரும் மதிப்பளிக்கப்பட்டனர். செவாலியர்
கலைமாமணி டாக்டர் வி.ஜி. சந்தோஷம் (விஜிபி குழுமம் தலைவர்) அவர்களுக்கு "திருவள்ளுவர்
உலகத் தூதர் வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் 156
திருவள்ளுவர் சிலைகளை நிறுவிய அவரது அசாதாரண பணிக்காக இவ்விருது வழங்கப்பட்டது.
புதுமைத்தேனீ மா.
அன்பழகன் (சிங்கப்பூர்) அவர்களுக்கு "உலகளாவிய தமிழ் இலக்கிய சேவையாளர் விருது"
வழங்கப்பட்டது. 37 நூல்கள் படைத்து, 140 தமிழ் நூல்கள் வெளியிட உதவிய அவரது தொடர்ச்சியான
பணி இவ்விருதுக்கு காரணம்.
மேலும், Rev.
Dr. அல்போன்ஸ் மாணிக்கம், S.J அவர்களுக்கு "சிறந்த கல்வியாளர் விருது", திரு.
ஜங்கனம் கிம் அவர்களுக்கு "கொரியா-தமிழ் மொழி, பண்பாடு, விளையாட்டு ஒன்றுமைகள்"
விருது, திரு. யாங் கீ மூன் அவர்களுக்கு "கொரிய-தமிழ் மொழி ஆய்வு" விருது,
பேராசிரியர் ப. அருளி (இந்தியா) அவர்களுக்கு "தமிழ் சொற்பிறப்பியல் ஆய்வுகள்"
விருது ஆகியவை வழங்கப்பட்டன.
ஆய்வுக்கட்டுரைகளுக்கு பரிசுத்தொகை
மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட
சிறந்த மூன்று ஆய்வுக்கட்டுரைகளுக்கு தலா 100,000 கொரிய வோன் (ரூ.6,000) பரிசுத்தொகையும்,
12 சிறந்த கட்டுரைகளுக்கு தலா 20,000 கொரிய வோன் (ரூ.1,000) பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
சிறந்த கட்டுரைகள் புகழ்பெற்ற கல்வி இதழ்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
சிறப்பு உரையாளர்களின் ஆழமான கலந்துரையாடல்
மாநாட்டில் பல முக்கிய
அறிஞர்கள் சிறப்புரை ஆற்றினர். லயோலா கல்வியியல் கல்லூரி செயலாளரான Rev. Dr. அல்போன்ஸ்
மாணிக்கம், S.J. அவர்கள் "திருக்குறள் மற்றும் சமூக நீதி" என்ற தலைப்பில்
முதன்மை உரையாற்றினார்.
புதுமைத்தேனீ மா.
அன்பழகன் அவர்கள் "உலகில் தனித்துவ இலக்கியம் திருக்குறளே" என்ற தலைப்பிலும்,
பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி (கனடா) அவர்கள் "திருக்குறளின் உலகளாவிய செல்வாக்கு"
என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
பிரான்சைச் சேர்ந்த
Dr. Alexis Devaraj அவர்கள் "திருவள்ளுவர் கட்டமைப்பில் காமம்" என்ற தலைப்பிலும்,
திருக்குறளை கொரிய மொழியில் மொழிபெயர்த்த கவிஞர் சகாய டர்சியூஸ் பீ அவர்கள் "திருக்குறளும்
கொரிய தத்துவமும் - ஓர் ஒப்பீட்டு ஆய்வு" என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர்.
முனைவர் D. ஞானராஜ்
அவர்கள் "திருவள்ளுவர் சொல்லும் கல்வி மற்றும் ஜாக் மெசிரோவின் உருமாற்றக் கற்றல்
கோட்பாட்டிற்கும் இடையிலான ஒற்றுமைகள்" என்ற தலைப்பில் ஆராய்ச்சி சார்ந்த உரையாற்றினார்.
பாண்டிச்சேரி முதலமைச்சரின் பாராட்டு
பாண்டிச்சேரி முதலமைச்சர்
என்.ரங்கசாமி அவர்கள் இந்த வரலாற்று சிறப்பு மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.
"தமிழர்கள் அதிக அளவில் குடியேறி வாழாத ஒரு நாட்டில், தமிழ் மொழியின் பெருமையையும்
திருவள்ளுவர் பெருந்தகையின் அழியாத தத்துவங்களையும் உலகிற்கு எடுத்துரைக்கும் தென்கொரியா
தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், மதுரை உலகத்
தமிழ்ச் சங்கம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், வி.ஜி உலகத் தமிழ்ச் சங்கம்
ஆகியவை இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சிக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தன.
எதிர்காலத்திற்கான முக்கிய தீர்மானங்கள்
முதலாவதாக, தென்கொரியாவில்
தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டை பரப்புவதற்கும், ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும்
"தமிழ் பண்பாட்டு மையம்" நிறுவப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
இரண்டாவதாக, தென்கொரியாவில்
முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு விரிவான
வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
மூன்றாவதாக, இந்தியா
மற்றும் தென்கொரியா இடையே பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கிடையே
நீண்டகால கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டுமுயற்சிகள் (MoU) நிறுவப்பட வேண்டும் என்று
தீர்மானிக்கப்பட்டது.
மாநாட்டு அமைப்பாளர்கள்
பேராசிரியர் சந்திரசேகரன்,
ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ச. திருநாவுக்கரசு,
முனைவர் ஜான்சி ராணி ஆகியோர் அறிவியல் குழு உறுப்பினர்களாக பணியாற்றினர்.
அருட் தந்தை இன்பராஜ்
மைகேல், பேராசிரியர் பலமுரளிகிருஷ்ணன், திரு ஹேமநாதன், திரு ஸ்வாமிநாதன், திரு பிரான்சிஸ்
ஜெவெல்சன், திரு விபின் ஜியோ, திரு. ருவன் ஸ்ரீநாத், முனைவர் மகேந்திரன், திரு. ஆனந்த்
மற்றும் திரு. துரை ஆகியோர் மாநாட்டு சிறப்பு குழுவினராக செயல்பட்டனர்.
எதிர்கால திட்டங்கள்
இந்த மாநாட்டின்
வெற்றியை அடுத்து, தென்கொரியாவில் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் பரவலுக்கான பல
நீண்டகால திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தமிழ்-கொரிய கலாச்சார பரிமாற்ற திட்டங்கள்,
தமிழ் மொழி வகுப்புகள் மற்றும் பயிற்சி திட்டங்கள், திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கிய
ஆய்வுகள், தமிழ்-கொரிய மொழி ஒப்பீட்டு ஆய்வுகள், ஆண்டுதோறும் தமிழ் மற்றும் வணிக மாநாடுகள்
ஆகியவை இத்திட்டங்களில் அடங்கும்.
முடிவுரை
தமிழர்கள் அதிக அளவில்
குடியேறி வாழாத ஒரு நாட்டில் இத்தகைய மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது, தமிழ் மொழியின்
உலகளாவிய வீச்சுக்கும், திருக்குறளின் உலகளாவிய முக்கியத்துவத்துக்கும் ஒரு சிறந்த
எடுத்துக்காட்டாகும். திருவள்ளுவரின் அழியாத தத்துவங்கள் இன்றைய உலகில் எவ்வளவு பொருத்தமானவை
என்பதை இந்த மாநாடு நிரூபித்துள்ளது.
இந்த மாநாட்டின்
வழியாக கொரியா நாட்டிற்கும் இந்திய நாட்டிற்கும் கல்வி, தொழில்நுட்பம், பண்பாடு பரிமாற்றம்
நடைபெறும் என்று மாநாட்டு அமைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
மாநாட்டு அமைப்பாளர்கள்,
இந்த வரலாற்று மாநாட்டின் வெற்றிக்கு பங்களித்த தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு அரசு,
பாண்டிச்சேரி முதலமைச்சர், சேஜோங் பல்கலைக்கழகம், மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், செம்மொழித்
தமிழாய்வு மத்திய நிறுவனம், உலகத் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளுக்கும்
நன்றி தெரிவித்தனர்.
"தமிழ்
வாழ்க! திருக்குறள் வாழ்க! உலகம் வாழ்க!"




