வாழ்வியல் சிந்தனைகள் 2 - ராதா மனோகர்



இயற்கை அழிவு நம் மனதில் தொடங்குமா?

(Collective Consciousness… become Collective Unconsciousness. Then it will create material realities)

தனி மனிதர்களுக்கு இருக்கும் மனநிலை அவர்கள் வாழ்வை தீர்மானிக்கும் என்பதைப் பற்றி பலமுறை எழுதி உள்ளேன்.

அவற்றைப் பலரும் ஏற்றுகொண்டாலும் ஏற்று கொள்ளா விட்டலும் அதுதான் உண்மை.

பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போன்று மனமே வாழ்க்கையை உற்பத்தி செய்கிறது. இங்கே நான் சொல்ல வரும் விடயம் அது அல்ல.

உலக வரலாற்றில் எங்கெல்லாம் இயற்கை அழிவுகள் நடக்கின்றதோ அங்கெல்லாம் அதைத் தொடர்ந்து அல்லது அதற்கு முன்பாகவே மக்கள் அமைதி இழந்து நாட்டில் குழப்பங்கள் நிலவுவதை காணலாம்.

இதை ஒரு தற்செயலான நிகழ்வு என்றுதான் பலரும் எண்ணுகிறார்கள். பிரபஞ்சம் இயங்கும் பொறிமுறையை பற்றிய போதிய புரிதல் இன்றைய உலகுக்கு கிடையாது என்பதே உண்மை.

ஈரான், இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற பல நாடுகளில் இயற்கை அழிவுகளும் அந்தந்த நாடுகளில் ஏற்பட்ட அரசியல் சமூக குழப்பங்களும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தவை போல தெரிவது எல்லாம் வெறும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல.

அவை நிச்சயமான தொடர்பு உடைய சம்பவங்கள்தான்.

மக்களின் கூட்டு மனநிலைதான் அவர்களது நாட்டையும் சமுகத்தையும் பாதிக்கிறது. மக்கள் மனநிலை மேம்பட்டால் அந்த நாடும் மேம்படும். மக்கள் குழம்பினால் இயற்கையும் குழம்பும். இது மிக தெளிவான உண்மை.

இந்த உண்மைகளை இன்றைய விஞ்ஞானம் மறுக்கிறது என்பது கூட உண்மை இல்லை. மறுப்பது போல நடிக்கிறது என்றுதான் கூறவேண்டும். காரணம் இருக்கிறது.

இன்றைய விஞ்ஞான உலகம் யார் கையில் இருக்கிறது? முழுக்க முழுக்க ஒரு வியாபார நோக்கம் கொண்டவர்கள் கையில்தான் விஞ்ஞானம் இருக்கிறது.

அவர்கள் புத்திசாலிகள் அல்ல. அவர்கள் புத்திசாலிகள் என்று உலகை நம்பவைத்து விட்டார்கள். அதுதான் உண்மை நிலை.

இன்றைய விஞ்ஞான உலகம் புத்திசாலி உலகமாக இருந்தால் உலகின் இயற்கை வளங்களை உயிரினங்களை இவ்வளவு மோசமாக அழித்து வருங்கால மனிதர்களுக்கு இவ்வளவு பெரிய தீமையை செய்திருக்க மாட்டார்கள்.

மீண்டும் திரும்பவே முடியாத அளவு உலகின் இயற்கையை அழித்து விட்டார்கள். அதுவும் மிகவும் குறுகிய கால பகுதிக்குள்ளேயே.

நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை பற்றிய கணக்கெடுப்பும் அது பற்றிய ஆய்வுமே பல உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டும்.

மனிதர்களின் கூட்டு மன நிலையே உலகின் மனம் போன்று பெரிதும் செயல்படுகிறது. மனிதர்களின் கூட்டு மனோநிலை என்பது மக்களின் பொதுவான அபிப்பிராயங்களே.

அரசியல் சமுக பொருளாதார விடயங்களில் மக்களின் மனோநிலை எப்படி இருக்க வேண்டும் என்று மிக குள்ளநரித்தனமாக திட்டமிட்டு பெரும் ஊடகங்கள் தங்கள் வியாபாரங்களை கட்டமைத்து உள்ளார்கள்.

இந்த வியாபாரிகளுக்கு உலக நன்மையைய் பற்றியோ இயற்கை பற்றியோ எதுவித கவலைகளும் பொதுவாக கிடையாது.

விளைவு?

தங்களின் குறுகிய நலன்களுக்காக மக்களின் சுதந்திர சிந்தனைகளை மறுக்கின்றனர். மக்களின் சிந்தனைகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவர்களின் வியாபர உத்தியாகும்.
இதை கொஞ்சம் தெளிவாக பாப்போம்.

உதாரணமாக, ஒரு நாட்டில் இரு பகுதியினருக்கு இடையில் வெறுப்பை மூட்டிவிடுவது மிகவும் பரவலாக பாவிக்கப்படும் உத்தியாகும்.

பெரிய கார்பரேட்டுக்களால் ஆளப்படும் மக்கள் இதில் இலகுவாக சிக்கி விடுவார்கள்.

இப்படிப்பட்ட சிக்கலில் மக்கள் மாட்டினால் மேலும் மேலும் அந்த வியாபாரிகளின் தேவைகளை அவர்கள் நிறைவேற்றிக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் விருப்பங்கள் சிந்தனைகள் எல்லாமே பெரிய வர்த்தக நிறுவனங்களின் தேவைகளை நிறைவேற்றும் வண்ணமே நிகழும்.

இந்த மக்கள் கூட்டம் சக மனிதரை ஏதாவது ஒரு காரணத்திற்காக அடிக்கடி ஒரு எதிரியாக கருதுவர். இந்த சக மனிதர் வெறுப்பு, பெரிய அளவில் பரிணாம வளர்ச்சிபெற்று இனங்கள் குழுக்கள் மதங்கள் இடையேயான மோதலாக மாறும்.

எப்பொழுதெல்லாம் அந்த நிலை வருகிறதோ அப்போதெல்லாம் அந்த வர்த்தகர்களின் நோக்கங்கள் நிறைவேறி கொண்டே இருக்கும்.

அதுதான் தற்போது பெரிதும் நடக்கிறது.

தங்கள் மனதை முழுவதும் வெறுப்பாலும் கோபத்தாலும் நிரப்பிய நிலை எங்கெல்லாம் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் ஒரு கொதி நிலையில் மக்கள் இருப்பர்.

தாங்கள் எதற்காக மன அமைதியை தொலைத்து விட்டு இருக்கிறோம் என்பதை கூட மறந்து விடுவார்கள்.

அவர்களின் ஆழ்மனைதில் அது விஷ விருட்சம் போல வேரூன்றி விட்டிருக்கும்.

இந்த நிலை ஏற்பட்டு விட்டால் இது மிகவும் அடர்த்தியான சக்தி மிகுந்த உணர்வாகும்.

இது நிச்சயம் அவர்களை சுற்றி உள்ள இயற்கையை பாதிக்கும்.

மனிதர்களின் உணர்வுகள் அவர்களை தாங்கி நிற்கும் இயற்கையை மெதுவாக ஆனால் ஆழமாக பாதிக்கும். இயற்கையின் சீற்றம் என்று பொதுவான வாக்கியத்தால் குறிப்படப்படும் விடயம் இதுதான்.

Collective Unconsciousness

அவர்களின் கொதிப்படைந்த மனோநிலையானது அவர்களை சுற்றி உள்ள இயற்கையின் மீது பிரதிபலிக்க தொடங்கும்.

இதை நம்புவது கொஞ்சம் கடினமாக இருக்கும் ஆனால் இதுதான் அழுத்தம் திருத்தமான உண்மை.

நாடுகளில் ஏற்படும் இயற்கை அழிவுகள் பெரிதும் அந்தந்த நாட்டு மக்களின் கூட்டு மனோநிலையால் ஏற்படுகிறது.

இதை நம்புவதற்கு வரலாறுகள் பற்றிய பெரிய ஆய்வு தேவைபடுகிறது.

இதில் மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் மனிதர்கள் எல்லோருமே சக மனிதரோடு மகிழ்வாக வாழ்வதையே நோக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் மனிதர்கள் அப்படி மகிழ்வாக வாழ்வது மதங்களுக்கும் அரசியலுக்கும் வியாபாரங்களுக்கும் அவ்வளவு பிடித்தமான விடயம் அல்ல. மூன்றும் அடிப்படையில் ஒன்றுதான்.

ஒரு சிறிய உதாரணத்தை கூறிக்கொண்டு இந்த கட்டுரையின் இந்த பாகத்தை நிறைவு செய்கிறேன்.

கடந்த ஐம்பது வருடங்களாக இலங்கையில் குறிப்பாக தமிழர் பகுதிகளில் புயல், மழை, சுனாமி, வெள்ளப்பெருக்கு போன்றவை தொடந்து வருவது உங்களுக்கு தெரியும்.

அதிலும் மிகவும் சரியாக குறிப்பிடுவது என்றால் சுனாமி மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றை கொஞ்சம் அவதானிக்க வேண்டும்.

தமிழர்களின் மனோ நிலை மிகவும் அமைதி குலைந்த நிலையில்தான் பல வருடங்களாக காணப்படுகிறது.

அதிலும் அழிவுகளை போற்றி புகழ்பாடி அவற்றை ஒரு காவியம் போன்று அவற்றை பற்றி கவிதைகள் பாடுவதும், அந்த அழிவுகளை அது தந்த வலியை பற்றி சதா பேசுவதும், உண்மையில் அவற்றை எல்லாம் ஒரு திருவிழா போல கொண்டாடும் கலாச்சாரம் உருவாகி உள்ளது போல தோன்றுகிறது.

இயற்கை விதியானது நீங்கள் விரும்புவதை அல்லது கொண்டாடுவதை அது உங்களுக்கு மீண்டும் மீண்டும் தரும். நடக்கும் சம்பவங்கள் ஒன்றும் சம்பந்தமே இல்லாமல் வானத்தில் இருந்து வந்து குதித்து விடவில்லை.

உங்களை சுற்றி உள்ள இயற்கையின் ஒவ்வொரு அசைவும் உங்களின் அழைப்பை ஏற்றே உங்களை நோக்கி வருகிறது.

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை.

சுனாமியும் முள்ளிவாய்க்கால் அழிவும் கூட மனிதர்கள் மனதில் இருந்துதான் வந்திருக்கிறது எனபதுதான் இயற்கை விதி கூறும் உண்மை.

இயற்கைக்கு சிங்களவன் தமிழன் பேதமெல்லாம் கிடையாது. இயற்கைக்கு மனிதர்கள், ஆடு, மாடு, பயிர், மரங்கள், செடிகொடி என்று கூட பேதங்கள் கிடையாது.

Collective Consciousness … become Collective Unconsciousness

Previous Post Next Post

نموذج الاتصال