புலிகளை நம்பி வைகோவும்,
வைகோவை நம்பி புலிகளும்
கெட்டழிந்த கதை!
ராதா மனோகர் (கனடா)
வைகோ ஒரு அயோக்கியர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் அவரின் புத்திசாலித்தனத்தை என்னால் மெச்சாமல் இருக்கவும் முடியவில்லை..இவர் ஒரு அசல் ஆர் எஸ் எஸ் காரர்.
திராவிட இயக்கத்திற்குள் ஊடுருவிய சனாதனவாதி.
தனது சுயரூபத்தை மறைத்து புலிகளோடு உறவு கொண்டாடி அவர்களை மிக சரியாக இனம் கண்டு பயன்படுத்தினார்.
அது ஓரளவு பயனளித்தது ஆனாலும் அதன் முழு பயனை இவர் அடையவில்லை. அந்த சோகம் வாழ்நாள் முழுவதும் இவருக்கு உண்டு.. பாவம்.
புலிகளை பயன்படுத்தி திமுகவை கைப்பற்றும் முயற்சி ஓரளவு வெற்றி பெற்றது என்றுதான் கூறவேண்டும்.
அந்த முயற்சிக்கு புலிகளின் பூரண ஒத்துழைப்பை இவர் பெற்றுக்கொண்டமை, இவரின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று எண்ணுகிறேன்.
புலிகள் இவரின் திறமையை, இவரின் செல்வாக்கை, இவரின் விசுவாசத்தை எல்லாம் பூரணமாக நம்பினார்கள்.
உலகில் எவருக்குமே உண்மையாகவோ, விசுவாசமாகவோ இருந்தே பழக்கப்படாத புலிகள், இவரிடம் உண்மையிலேயே விசுவாசமாகவே நடந்து கொண்டார்கள்.
தங்கள் கஜானாவையும் விளம்பர வெளிச்சத்தையும் தாராளமாக வழங்கினார்கள்.
இவருக்காக எந்த தலைவரையும் கொல்லவும் தயாராக இருந்தார்கள்.
இவரின் கண்ணசைவுக்காக காத்திருந்தார்கள்.
ஒரே ஒரு தவறான கணக்கினால் மட்டுமே அது கைகூடவில்லை.
அதுதான் ராஜீவ் காந்தி கொலை.
புலிகளின் ராஜிவ் காந்தி கொலையானது, இவரையும் மற்றும் இதர ஆர் எஸ் எஸ்காரர்களையும் (நரசிம்மராவ் சு.சாமி போன்றோர் ) மகிழ்வித்தது உண்மைதான்.
ஆனால் அதன் காரணமாகவே கலைஞரை கொலை செய்து, வைகோவை திமுகவின் தலைவராக்கும் சதி முயற்சி தடைப்பட்டது.
ராஜிவ் காந்தி கொலையால் தமிழ்நாட்டில் புலிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
தேடி தேடி கைது செய்யப்பட்டனர். என்கவுண்டர் கூட செய்யப்பட்டனர்.
இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் புலிகள் மனம் வைத்தால், வைகோவின் லைனை கொஞ்சம் கிளியர் பண்ணி இருக்க முடியும் என்று வைகோ உண்மையாகவே கருதினர்.
அந்த காலக்கட்டங்களில் புலிகள் சர்வ வல்லமையோடு இருந்தார்கள்.
எதுவும் எப்போதும் செய்யக்கூடிய வல்லமை உள்ள புலிகள் தனக்காக இன்னும் கொஞ்சம் முயற்சித்து திமுகவை பறித்து தன் கையில் தந்திருக்க முடியும் என்று நம்பினார் வைகோ.
இந்த விடயத்தில் கொஞ்சம் அதிகமாகவே புலிகளை நம்பி இருந்தார் வைகோ. அதனால் எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்தது.
ராஜிவ் காந்தி கொலையின் பின்புதான் புலிகளுக்கு கொஞ்சம் அறிவு வேலை செய்ய தொடங்கி இருந்தது.
தமிழ்நாட்டின் எதிர்ப்பை ரொம்பவே அண்டர் எஸ்டிமேட் (Under Estimate) செய்துள்ளோம் என்று காலம் கடந்து உணர்ந்தார்கள்.
அப்படி அவர்களை ஒரு அறிவியல் இருட்டில் கொம்ஃபோர்ட் சோனிலில் (comfort zone) வைத்திருந்ததில் வைகோவுக்கும் நெடுமாறன் போன்றோருக்கும் பெரும் பங்குண்டு.
திமுகவுக்கு உரிமை கோரிய வைகோவின் திட்டம் எல்லாம் தேர்தல் கமிஷனில் அடிபட்டு போனபின்பு, வைகோ முழுக்க முழுக்க ஆர் எஸ் எஸ் இன் அடியாளாகவே மாறிப்போனார்.
அதன் பின்பு அவரின் பல அரசியல் தகிடு தத்தங்களில் அத்வானி, வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி போன்ற ஆர் எஸ் எஸ் பிராணிகளின் ஆலோசனை துலாம்பரமாக தெரிந்தது.
ஆர் எஸ் எஸ் இவரை ஒரு மலிவான அடியாளாகவே பயன் படுத்தியது. போரின் இறுதிக்கட்டத்தில் கூட புலிகள் இவரின் ஆர் எஸ் எஸ் நெருக்கம் தங்களை காப்பாற்றும் என்று நம்பினார்கள்.
அந்த அளவுக்கு அவர்களின் தலையில் இவர் மிளகாய் அரைத்திருந்தார்.
அங்கே கதை கந்தலாகி கொண்டிருந்த நேரத்தில் இவர் பாஜக ஆட்சியை பிடிக்கும் இந்திய ராணுவம் குதிக்கும் என்று புலிகளிடம் கதையளந்து கொண்டிருந்தார்.
அவர்கள் இதை நம்பினார்களா இல்லையா என்பதல்ல விடயம்.
அவர்கள் மீள முடியாத படுகுழிக்குள் ஏற்கனவே விழுந்து விட்டார்கள் என்பது அவர்களுக்கு தெரிந்தே இருந்தது.
இருந்தாலும் கூட கடலில் தத்தளிப்பவன் எந்த துரும்பையும் இறுக்கி பிடிப்பான் என்பது போல, வைகோவின் பொய்களை செவி மடுத்து கொண்டிருந்தனர்.
இன்னுமா இவர்கள் என்னை நம்புகிறார்கள் என்று சலிப்படைந்த வைகோ, இறுதி கட்டங்களில் அங்கிருந்து வரும் தொலைபேசி அழைப்புக்களை துண்டித்து கொண்டிருந்தார்.
திமுகவை கைப்பற்ற முடியாமல் போனமைக்கு புலிகளும் ஒரு காரணம் என்ற ஆதங்கம் வைகோவிடம் நிரந்தரமாக உண்டு.
அவர்கள் இன்னும் கொஞ்சம் மனம் வைத்திருந்தால் அது நடந்திருக்கும் என்று நம்பினார்.
தனது மனதில் இருந்த அந்த நிரந்தர ஏமாற்றத்திற்கு போரின் இறுதி கட்டத்தில் பழி தீர்த்துக்கொண்டார் வைகோ.
-ராதா மனோகர்
