கோ. பாலச்சந்திரன் IASக்கு "உலகின் தமிழன்" விருது : கொரியா தமிழ் சங்கம் வழங்குகிறது!


கோ.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு கொரியா தமிழ் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் உலகின் தமிழன் என்ற விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொரியா தமிழ் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது...

ஈராயிரம் அண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளிர்“ என்ற புறநானுற்று பாடல் வரி, தத்தமது முலோபாய நலன்கள் நிமித்தம் முறுகல் நடைபோடும் இன்றைய உலகம், மக்களின் நல்வாழ்வும் மகிழ்ச்சியும் நிலைபெற கைக்கொள்ள வேண்டிய தூதாண்மை தத்துவம் (Diplomatic Philosophy) என்றால் மிகையாகாது.

உலக மக்களை தன்பால் ஈர்த்த கம்பன், காளிதாசன், சேக்சுபியர் மற்றும்  தாகூர்  போன்றோரால் படைக்கப்பட்டு  புகழ்பெற்ற உலக இலக்கியங்கள் பல உண்டு. என்றாலும் எக்காலத்திற்கும், உலக மக்கள் யாவருக்கும் பொருந்தும் வகையில் அமைந்த திருக்குறளே உலக அறிஞர்கள் கண்ட "உலகின் இலக்கியம்".

அறிஞர்களாக  தலைவர்களாக மற்றும் துறைசார் வல்லுனர்களாக உலக அளவில் பெரும் சாதனைகளைச் செய்து போற்றுதலுக்குரிய உலகத்தமிழராக தமிழ் கூறும் நல்லுலகில் பலர் உயர்ந்து நிற்கின்றனர்.

தடம் பதிக்கும் உரையாளராக, ஆற்றல்மிக்க தமிழ்த்தொண்டராக, தன் வாழ்க்கைப்பாதையில் சென்ற இடமெல்லாம் தமிழ் உலகிற்கு தமிழர் தந்த கொடைகளான இலக்கியங்களை, மதிப்புறு கூறுகளை, தத்துவங்களை, பண்பாட்டை கொண்டு செல்ல பணியாற்றுவோரில் குற்பிடத்ததக்கவர் பணி நிறைவு பெற்ற மிக மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி  கோ. பாலச்சந்திரன் அவர்கள்.

பல தமிழ்ச் சங்கங்ளுக்கு இன்றளவும் தலைவராகவும் ஆலோசகராவும் இருந்து வருவதோடு மட்டுமல்லாமல், உலகில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்படும் (ஃகார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட) உயர்நிலைக்  கற்றல் மற்றும் ஆய்வு நோக்கிய பணிகளுக்கு புரவலராக இருந்து வருகிறார்.

தமிழரோ/பிறரோ, நடந்த வரலாறோ/நிகழ்கால சான்iற! யாராக இருந்தாலும் படைகொண்டு  வெற்றிகொண்டவன் பார்வையிலிருந்து மட்டும் வரலாற்றை பார்க்கமால், போரில் ஏற்படும் மக்கள் இழப்பு, போர் தொடுத்த மன்னவன் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார, ஆட்சிப்பணி குறைகள், நிகழ்ந்த வரலாற்று குழப்பம்/தவறுகள் உள்ளிட்ட அனைத்தையும் பகுப்பாய்வு செய்து அறிவு வெளிச்சம் பாய்ச்சும் தமிழ்ப்பகலவனாக அவர் செயலாற்றுவதை தமிழ்கூறும் நல்லுலகு நன்கு அறியும்.

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்

நீங்காமை வேண்டு பவர்

என்ற திருக்குறளுக்கு முழு இலக்கணமாய் மாற்றுக்கருத்தையும் உரிய தகைமையுடன் எடுத்துரைத்து “வில்லில் நாணேற்றி வளைத்து குறிபார்த்து எய்யபப்படும் அம்புபோல் எதிர்நிற்போர் மனதில் ஆழமாக தாக்கம் செலுத்தும் வகையில் தமிழுக்காகவும், தமிழருக்காகவும், அரசமைப்பு உள்ளிட்ட அமைப்பாற்றல்களை காத்திடவும் ஊடகவெளியில் சொற்போர் புரிபவர் கோ. பாலச்சந்திரன் அவர்கள்.. 

எல்லாவற்றிற்கும் மேலாக, மன்னராட்சி, சர்வாதிகாரம், கொடுங்கோன்மை மற்றும் முற்றுமுழுதான நிறைவேற்று அதிகாரம் என உலகம் பல ஆட்சிமுறைகளை கண்டுவந்திருக்கிறது. காலப்போக்கில் மனித சமுதாயம் முன்னோக்கி நகர்ந்து மக்களாட்சியில் நிலைபெறுவதே சிறந்தது என்ற தத்துவத்தை ஏற்றது. அவ்வைகையில் உலகின் பெரும்பகுதி மக்கள் மக்களாட்சியின் அங்கத்தினராக வாழ்கின்றோம்

மக்களாட்சியில் பெரும் நம்பிக்கைகொண்ட  கோ. பாலச்சந்திரன் அவர்கள், ஆட்சிப்பணியை பின்னாளில் இருந்து ஒருங்கிணைத்து செயலாற்றும் கருவியான அதிகார கட்டமைப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரநிதிகளின் வழிக்காட்டல்களை/கோரிக்கைகளை உரிய மதிப்புடன் கையாண்டு செயலாற்றுவதே மக்களாட்சி மேலும் நிலைபெற வழிவகுக்கும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் என்பது காலத்தே நினைகூறத்தக்கது.

கோ. பாலச்சந்திரன் அவர்களின்  இத்தகைய செயல்பாடுகளையும், சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியில்லாமல் பயணிக்கும் உயரிய பன்பையும் பாராட்டி அங்கீகரித்து "உலகின் தமிழன்" என்கிற விருதை அவருக்கு கொடுத்து பாராட்டுவதில் பெருமகிழ்ச்சியடைகிறது தமிழ்ச் சங்கம்.

விருது எதிர்வரும் 12 புரட்டாசி, திருவள்ளுவர் ஆண்டு 2054 (29 அக்டோபர் 2023) ஞாயிறன்று சொங்னம் (சியோல்), தென்கொரியா, கச்சான் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் “தமிழ் கலை-இலக்கிய சந்திப்பு - கொரிய தமிழ்ச் சங்க விருதுகள் 2023” நிகழ்வில் நேரடியாக வழங்கப்படும்.

கொரிய தமிழ்ச் சங்கம், பூமிப்பந்தில் தமிழ்நாடு கடைப்பிடித்த அரசியல், சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கையின் விளைவால் உயர்கல்வி பயின்று பொறியாளர்களாகவும், அறிவியலாளர்களாகவும், பேராசிரியர்களாகவும், உயர் தொழில்நுட்பவியலாளர்களாகவும் உருவான எளிய மக்களின் பிள்ளைகளால் "முயற்சி திருவினையாக்கும்" என்கிற வழியில் உழைப்பால் உயர்ந்த தென்கொரிய நாட்டில் அமைக்கப்பட்ட பதிவு  செய்யப்பட்ட சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

"உலகின் தமிழன் விருது” ஒவ்வொருவருடமும் கொரிய தமிழ்ச் சங்கத்தால் நேரடியாக வழங்கப்படும் ஒரேயொரு உயரிய விருதாகும். இவ்விருதினை பெறுவோருக்கு சிறப்பு செய்யும் விதமாக விருதாளர் கொரியா வந்து செல்லும் விமான பயணம் உள்ளிட்ட வருகை செலவுகளை சங்கமே ஏற்றுக்கொள்ளும். மேலும், விருதாளருக்கு கேடயம், சங்கத்தால் இயன்ற அடையாள பணமுடிப்பு மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கி மதிப்பளிக்கப்படும்!

இவ்வாறு கொரியா தமிழ் சங்கம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Previous Post Next Post

نموذج الاتصال