ஜல்லிக்கட்டு வரலாறும் போராட்டமும் 3 - ஆதனூர் சோழன்




https://www.uthayamugam.com/2024/01/1.html

https://www.uthayamugam.com/2024/01/2.html

உலகம் முழுவதும் காளைகள் பங்கேற்கும் விளையாட்டுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.

வன விலங்குகளாக திரிந்தவற்றை மனிதன் வீட்டு விலங்குகளாக பயன்படுத்தத் தொடங்கிய காலத்திலிருந்தே இதுபோன்ற விளையாட்டுகளும் தொடங்கியிருக்க வேண்டும்.

நாய்கள் கி.மு.13 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐரோப்பாவில் வீட்டு விலங்காகவும் வேட்டைக்காகவும் ஓட்டப்பந்தையங்களுக்காகவும் மீட்பு நடவடிக்கைகளுக்காகவும் சேவை செய்வதற்காகவும் சண்டையிடுவதற்காகவும் காவல்காற்பதற்காகவும் இறைச்சிக்காகவும் பயன்படுத்தப்பட்டன. 

வெள்ளாடு கி.மு. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு ஆசியாவில் வீட்டு விலங்காக பயன்படுத்தப்பட்டது. பால், இறைச்சி, தோல், கண்காட்சி, ஓட்டபந்தையம், சண்டை, நிலத்தை சுத்தப்படுத்துதல் ஆகியவற்றுக்காகவும் செல்லப் பிராணியாகவும் பயன்படுத்தப்பட்டது.

கி.மு. 9 ஆயிரம் ஆண்டுகளிலிருந்து 8 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் செம்மறி ஆடு வீட்டு விலங்காக பயன்படுத்தப்பட்டது. இவற்றை அனடோலியா எனப்படும் ஆசியா மைனர் பகுதியிலும் ஜக்ரோஸ் மலைத்தொடர் அருகிலும் முதன்முதலில் வீட்டு விலங்காக பயன்படுத்தினார்கள். இறைச்சி, பால், தோல், ஓட்டப்பந்தையம், சண்டை மற்றும் அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பழக்கப்படுத்தி பயன்படுத்தப்பட்டது. 

கி.மு. 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பன்றிகள் வீட்டு விலங்காக பழக்கப்படுத்தப்பட்டன. ஆசியாவின் மேற்குபகுதி மற்றம் சீனாவில் பன்றிகள் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டன. இறைச்சி, தோல், ஓட்டப்பந்தையம், சண்டை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக இவை பயன்படுத்தப்பட்டன. 

பசுக்கள் கி.மு. 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வீட்டு விலங்காக பயன்படத் தொடங்கின. இந்தியா, மத்திய கிழக்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் முதன்முதலில் இவை வீட்டு விலங்காக பழக்கப்படுத்தபட்டன. அவ்ரோச்   எனப்படும் மாட்டு இனத்தில் இருந்து இவை வீட்டு விலங்காக தேர்வு செய்யப்பட்டன. இவற்றையும் இறைச்சி, பால், தோல், உழவு வேலைகள், பயணங்களில் உதவி, உரம், சண்டை, கண்காட்சி, செல்லப்பிராணிகள் என பல்வேறு விதங்களில் பசுக்களை மனிதர்கள் பயன்படுத்தினர்.  

கி.மு. 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் காளைகள் இந்தியாவில் பழக்கப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டன. அவுரோச் மாட்டு இனத்தில் இருந்து இவை தேர்வு செய்யப்பட்டு இனவிருத்திக்காகவும் இறைச்சிக்காகவும் உழவு, வயல் வேலைகள், பார வண்டி இழுத்தல், உரம் ஆகியவற்றுக்காக இவை பயன்பட்டன. காளைகள் சண்டைகளிலும், ஓட்டப்பந்தையங்களிலும் ஈடுபடுத்தப்பட்டன. 

ஆப்பிரிக்க காட்டு பூனைகள் கி.மு. 8 ஆயிரம் ஆண்டுகளிலிருந்து கி.மு. 7 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மேற்கு ஆசியாவில் செல்லப் பிராணிகளாகவும் பூச்சிகளை ஒழிக்கவும் பழக்கப்படுத்தி பயன்படுத்தப்பட்டன. 

கோழிகள் கி.மு. 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் வீடுகளில் வளர்க்கப்பட்டன. இறைச்சி, முட்டை, இறகுகள், சண்டைகள் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்பட்டன.

கி.மு. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்து நாட்டில் ஆப்பிரிக்க வனக் கழுதைகள் வீட்டு விலங்காக பழக்கப்படுத்தி பயன்படுத்தப்பட்டன. போக்குவரத்துக்காகவும் கடின வேலைகளுக்காகவும் உழவு, இறைச்சி, பால், ஓட்டப்பந்தையம் உள்ளிட்ட பலவித வேலைகளில் கழுதைகள் ஈடுபடுத்தப்பட்டன. 

கி.மு. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் காட்டுவாத்துகள் பழக்கப்படுத்தப்பட்டு வீடுகளில் வளர்க்கப்பட்டன. சீனாவில்தான் இவை முதன்முதலில் வீட்டு பறவையாக பயன்படுத்தப்பட்டன. இறைச்சி, இறகுகள், முட்டை, பந்தையம் உள்ளிட்ட பல்வேறு உபயோகங்களுக்காக இவற்றை பயன்படுத்தினர். 

எருமைகள் முதன்முதலில் கி.மு. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியா மற்றும் சீனாவில் பயன்படுத்தப்பட்டன. விவசாய வேலைகளிலும் சந்தைகளிலும் ஈடுபடுத்தப்பட்டன. இவற்றின் பால் மற்றும் இறைச்சியை மனிதர்கள் உணவாக பயன்படுத்தினர். எருமை பந்தையங்களும் நடைபெற்றன.  

கி.மு. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தேனீன்களையும் மனிதர்கள் பழக்கப்படுத்தி வீடுகளில் தேன்கூடுகள் அமைத்தனர். ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் தேன், மெழுகு, மகரந்தை சேர்க்கை ஆகியவற்றுக்கு இவற்றை பயன்படுத்தினர். 

கி.மு. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அரேபியாவில் ஒட்டகங்களை வீட்டு விலங்காக பயன்படுத்தினர். போக்குவரத்து, கடின வேலைகள், வேட்டை, உழவு, ஓட்டப்பந்தையம், சண்டை இவைத்தவிர இறைச்சி மற்றும் பாலுக்காகவும் ஒட்டகத்தை வளர்த்தார்கள். 

குதிரைகளை கி.மு. 3 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் கஜகஸ்தானில் வீட்டு விலங்காக பயன்படுத்தினர். போக்குவரத்து, பால், இறைச்சி, கடின வேலைகள், வழிகாட்டுதல், சேவைகள், வேட்டை, உழவு, சண்டை, ஓட்டப்பந்தையம் ஆகியவற்றில் இவை மனிதர்களுக்கு பயன்பட்டன. 

கி.மு. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பட்டுப்புழுக்களை மனிதன் வளர்க்கப்பழகினான். சீனாவில் முதன்முதலாக பட்டுப்புழுக்களை வளர்த்து பட்டுநூல் தயாரித்தனர். இவற்றை விலங்குகளுக்கும் தங்களுக்கும் உணவாகவும் சீனர்கள் பயன்படுத்தினர்.

மாடப்புறாக்களை கி.மு. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மத்திய தரைக்கடல் பிரதேசத்தில் வசித்த மக்கள் பழக்கப்படுத்தினர். புறாக்களின் இறைச்சியை உணவாக உண்டனர். பந்தையங்களுக்கும் செய்திகளை கொண்டு சேர்ப்பதற்கும் பழக்கப்படுத்தி பயன்படுத்தினர். 

சாம்பல் நிற வாத்துக்களை எகிப்து மற்றும் சீனாவில் கி.மு. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழக்கப்படுத்தி வளர்த்தனர். இறைச்சிக்காகவும் இறகுகள், முட்டைகள், கண்காட்சி ஆகியவற்றுக்காகவும் இவற்றை மனிதர்கள் பயன்படுத்தினர். 

யாக் அல்லது கவரிமா என்று அழைக்கப்படும் பனிப்பிரதேச மாடுகளை கி.மு 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் திபெத், நேபாளம் ஆகியநாடுகளில் பழக்கப்படுத்தி வளர்த்தனர். பால், இறைச்சி, போக்குவரத்து, கடின வேலைகள், ஓட்டப்பந்தையம், சண்டைகள், விவசாய வேலைகள் உள்ளிட்டவற்றுக்கு இந்த மாடுகளை பயன்படுத்தினார்கள். 

வனங்களில் வாழ்ந்த இரட்டைத் திமிள் ஒட்டகங்களை மத்திய ஆசியாவில் வசித்த மக்கள் அதாவது, குறிப்பாக ஆப்கானிஸ்தானில் வசித்த மக்கள் கி.மு. 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் வீட்டு விலங்காக பழக்கப்படுத்தினர். பால், இறைச்சி, ரோமம், ஓட்டப்பந்தையம், சண்டை, போக்குவரத்து, கடின வேலைகள், வேட்டை, விவசாய பணிகள் ஆகியவற்றுக்கு பயன்படுத்தினர். 

இலாமா என்று அழைக்கப்படும் ஒட்டக வகையைச் சேர்ந்த விலங்கை கி.மு. 2 ஆயிரத்து 400 ஆண்டுகளுக்கு முன் பெரு, பொலிவியா ஆகிய தென் அமெரிக்க நாடுகளில் வாழும் மக்கள் வீட்டு விலங்காக பயன்படுத்தினர். இந்த விலங்கும் போக்குவரத்து, இறைச்சி, ஓட்டப்பந்தையம், கண்காட்சிகள், கடின வேலைகள், சுமை தூக்குதல் ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்பட்டது. 

அற்பாக்கா என்று அழைக்கப்படும் இன்னொரு வகை ஒட்டக இன விலங்கை பெரு, பொலிவியா ஆகிய நாடுகளில் வசிக்கும் மக்கள் வீட்டு விலங்காக வளர்க்கின்றன. உயரமான மலைப் பகுதிகளில் கூட்டம்கூட்டமாக வளர்க்கப்படும் இந்த விலங்கு இறைச்சிக்காகவும் ரோமத்துக்காகவும் கண்காட்சிக்காகவும் பயன்படுகின்றன.

கினி கோழிகளை கி.மு. 2 ஆயிரத்து 400 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்க மக்கள் வீடுகளில் வளர்க்கப் பழகினர். இறைச்சி, முட்டைகள், பூச்சி ஒழிப்பு, வெளியாட்கள் வந்தால் எச்சரிக்கை, செல்லப்பிராணிகள் என்று பலவிதங்களில் இந்தப் பறவை பயன்படுத்தப்பட்டது. 

வாத்து இனங்களில் முஸ்கோவி வாத்து எனப்படும் இந்தப் பறவையை கி.மு. 700 முதல் கி.மு 600க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் தென் அமெரிக்க மக்கள் வீடுகளில் வளர்த்து பயன்படுத்தினர். இறைச்சி, முட்டைகள், இறகுகளுக்காக மட்டுமின்றி செல்லப்பிராணிகளாகவும் இவற்றை பயன்படுத்தினர். 

புறா வகைகளில் கழுத்தில் பட்டையுள்ள ஒருவகை வளைக்கழுத்து புறா கி.மு. 500 ஆண்டுகளுக்கு முன் வட ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்டது. இவற்றை செல்லப்பிராணிகளாகவும் இறைச்சிக்காகவும் காட்சிப் போட்டிகளுக்காகவும் மக்கள் வளர்த்தனர்.

பேண்டெங் அல்லது பாலி பசுக்கள் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் முதன்முதலில் வீட்டு விலங்குகளாக வளர்க்கப்பட்டன. இவற்றை பழக்கி வளர்த்த காலம் தெரியாவிட்டாலும் தென்கிழக்கு ஆசியா நாடுகளிலும் பாலியிலும் மக்கள் பெரிய அளவில் வளர்த்து பயன்படுத்தினர். இறைச்சி, பால், விவசாய வேலைகள் ஆகியவற்றில் இவை ஈடுபடுத்தப்பட்டனர். 

கவுர் அல்லது காட்டு எருது அல்லது கடமா என்று அழைக்கப்படும் இந்திய வகை மாடுகள் தென்கிழக்கு ஆசியா வடகிழக்கு இந்தியா ஆகிய பகுதிகளில் வசித்த மக்களால் பழக்கப்படுத்தப்பட்டு   வளர்க்கப்பட்டன. பெரும்பாலும் இவை காளைச் சண்டைகளுக்காகவும் இறைச்சிக்காகவும் பயன்படுத்தப்பட்டன. இவற்றை பழக்கப்படுத்திய காலம் தெரியவில்லை. 

காடுகளில் வசித்த வான் கோழிகளை கி.பி. 180களில் மெக்சிகோ மற்றும் அமெரிக்க மக்கள் வீடுகளில் வளர்க்கத் தொடங்கினர். இவற்றையும் இறைச்சி, முட்டைகள், இறகுகள் ஆகியவற்றுக்காக பயன்படுத்தினர். 

கி.பி. 300 மற்றும் கி.பி.400 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தங்க மீன்களை செல்லபிராணியாகவும் அலங்கார பிராணியாகவும் சீனர்கள் வளர்க்கத் தொடங்கினர். 

கி.பி. 600களில் ஐரோப்பிய முயல்களை ஐரோப்பியர்கள் தங்கள் வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கத் தொடங்கினர். பெல்ட்டுகள், இறைச்சி உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தின.

கி.பி. 1000 ஆண்டுகளில் சீனர்கள் சாதாரண கெண்டை மீன்களையும் தங்கள் வீடுகளில் தொட்டிகளில் அலங்காரத்துக்காக வளர்க்கத் தொடங்கினர். 

இதுவரை வீட்டுவிலங்குகளாக பழக்கப்படுத்தி தங்களது உபயோகங்களுக்காக மக்கள் பயன்படுத்திய விலங்குகளையும் பறவைகளையும் பற்றி பார்த்தோம். இனி வனத்தில் வாழ்ந்தாலும் விருப்பத்தின்பேரில் தங்கள் வீடுகளில் பழக்கப்படுத்தி வளர்க்கப்படும் சில விலங்குகளைப் பற்றி பார்க்கலாம்.

ரெய்ன்டீர் எனப்படும் ஒருவகை மான்களை ரஷ்யாவில் மேற்குப் பகுதியிலும் ஸ்வீடன், நார்வே உள்ளிட்ட நார்வேயில் அடங்கிய ஃபென்னோஸ்கேண்டியாவிலும் கி.மு. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வளர்த்தனர். இறைச்சி, பால், போக்குவரத்து, கடின வேலைகள், தோல், கொம்புகள், ஓட்டப்பந்தையம் ஆகியவற்றுக்காக இவற்றை பயன்படுத்தினர். 

அட்டாக்ஸ் எனப்படும் இன்னொரு வகை மான்களை எகிப்து மக்கள் கி.மு. 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு விலங்காக பழக்கப்படுத்தின. இறைச்சி, கொம்புகள், தோல் ஆகியவற்றுக்காக இந்த மான்களை வளர்த்தார்கள். 

சிமிட்டார் ஓரிக்ஸ் எனப்படும் இன்னொரு வகை மான்களையும் எகிப்து மக்கள் விரும்பி வளர்த்தார்கள். அழகிய கொம்புகளை உடைய இந்த மான்கள் கி.மு.2 ஆயிரத்து 320 முதல் கி.மு.2 ஆயிரத்து 150 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வீட்டு விலங்காக பழக்கப்படுத்தப்பட்டது. இறைச்சி, தோல், கொம்புகள் ஆகியவற்றுக்காக இவை வளர்க்கப்பட்டனர். 

ஆசிய யானைகளை கி.மு. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சிந்துசமவெளி நாகரிக மக்கள் வளர்த்தனர். கடினமான வேலைகளைச் செய்யவும் போக்குவரத்துக்கு உதவவும் வேட்டை, ஓட்டப்பந்தையம், சண்டைகள் ஆகியவற்றுக்கு யானைகள் பயன்படுத்தப்பட்டன.

எகிப்து கீரிகள் வித்தியாசமானவை இவற்றை வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய எகிப்தியர்கள் பூச்சிகளை கட்டுப்படுத்த பழக்கி வளர்த்தனர். இவை அந்தக்கால மக்களுக்கு செல்லப்பிராணிகளாகவும் இருந்தன. 

கி.மு. 1000 ஆண்டுகளுக்கு முன் மத்திய தரைக்கடல் நாடுகளில் அழகிய கொம்புகளையும் புள்ளிகளுடன் கூடிய உடலையும் கொண்ட கலைமான்களை மக்கள் விரும்பி வளர்த்தனர். இறைச்சி, கொம்புகள், தோல் ஆகியவற்றுக்காக இவை வளர்க்கப்பட்டன. 

கி.மு. 800 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பா, ஆசியா ஆகிய நாடுகளில் மருந்து குணமுள்ள அட்டை பூச்சிகளை மக்கள் வளர்த்தனர். அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட சில மருத்துவ சிகிச்சைகளுக்கு இந்தப் பூச்சிகளை பயன்படுத்தின.

கி.மு.500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் மக்கள் மயில்களையும் வீட்டு விலங்காக வளர்க்கத் தொடங்கினர். மயில்களை காட்சிப் பொருளாகவும் இறகுகளுக்காகவும் அலங்காரத்துக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்த்தனர். 

பச்சைக் கிளிகளை ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் வாழ்ந்தமக்கள் செல்லப்பிராணியாக வளர்த்து அவற்றுக்கு பேச்சு பயிற்சி கொடுத்தனர்.  இவற்றை பழக்கப்படுத்திய காலகட்டம் சரியாக தெரியவில்லை. 

சிவப்பு மான் கி.பி.10ம் ஆண்டுகளில் சீனா மற்றும் ரஷ்யாவில் வீட்டு விலங்காக வளர்க்கப்பட்டது.  இறைச்சி, வெல்வெட், தோல், கொம்புகள் ஆகியவற்றுக்காக இவை விரும்பி வளர்க்கப்பட்டன.

இந்திய கீரிப்பிள்ளைகள் சண்டைக்காகவும் பூச்சிகளை ஒழிக்கவும் வளர்க்கப்பட்டன. பலவீடுகளில் இவை பிள்ளைக்களைப்போல செல்லப்பிராணிகளாக கருதி வளர்க்கப்பட்டன. பழக்கப்படுத்தி வளர்க்கத் தொடங்கிய காலம் தெரியவில்லை.

அணில்களும் புராண காலத்திலேயே இந்தியாவில் மக்கள் விரும்பி வளர்க்கக்கூடிய விலங்காக இருந்தன. 


1960களில் முஸ்க்ஆக்ஸ் என்று அழைக்கப்படும் ஒருவகை எருதுகளை அமெரிக்காவில் பழக்கி வளர்த்தனர். கம்பளி, இறைச்சி, பால் ஆகியவற்றுக்காக இந்த எருதுகள் பயன்படுத்தப்பட்டன. 

மூஸ் எனப்படும் மாடு வகைகள் ரஷ்யா. ஃபின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் பிரபலமானவை. காளை மாடுகள் வித்தியாசமான கொம்புகளுடன் பருத்து காணப்படும். பசுக்கள் இழைத்த தோற்றத்துடன் கொம்புகளற்று காணப்படும். முகம் குதிரையின் முகத்தைப்போல இருக்கும். இந்தவகை விலங்குகளை ரஷ்யா, ஃபின்லாந்து, ஸ்வீடன் நாட்டு மக்கள் வீட்டு விலங்குகளாக வளர்த்தனர். இதற்கான காலம் தெரியவில்லை.

கி.பி.19ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்க மக்கள் தீக்கோழிகளை வீடுகளில் வளர்த்தனர். இறைச்சி, முட்டை, இறகுகள், தோல், கொழுப்பு எண்ணெய் ஆகியவற்றுக்காகவும் பந்தையங்களில் பயன்படுத்தவும் விரும்பி வளர்த்தனர்.  

உலகம் முழுவதும் காளைகள் பங்கேற்கும் விளையாட்டுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.

வன விலங்குகளாக திரிந்தவற்றை மனிதன் வீட்டு விலங்குகளாக பயன்படுத்தத் தொடங்கிய காலத்திலிருந்தே இதுபோன்ற விளையாட்டுகளும் தொடங்கியிருக்க வேண்டும். 

விலங்குகளை தனது சொந்த உபயோகங்களுக்கு பயன்படுத்திய மனிதன், அவற்றின் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் சில பந்தயங்களுக்கும் பழக்கப்படுத்தினான். ஓட்டப்பந்தயம்,சண்டை இரண்டிலும் அவற்றை ஈடுபடுத்தினான். 

பறவைகளையும், விலங்குகளையும் அவன் கையாண்ட விதம் மனிதஆற்றலின் மையமாக இருந்தது. குறிப்பாக, புறாக்களை தகவல் தொடர்பு சாதனமாக பயன்படுத்தினான். சேவல்களை சண்டை செய்ய பழக்கினான். மாடுகளையும் அவ்வாறே சண்டைக்கும், ஓட்டப்பந்தயத்திற்கும் பழக்கினான். இரண்டு காளைகளை மோதவிட்டு அவற்றின் ஆற்றலை கண்டு ரசித்தான். காளையுடன் நேரடியாக மோதி அதை அடக்குவதிலும் மகிழ்ச்சி கொண்டான். 

உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இந்த காளைச் சண்டைகள் பல்வேறு வடிவங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸின் சில பகுதிகள், இந்தியா, தான்சானியா, லத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோ, கொலம்பியா, ஈக்வடார், வெனிசூலா, பெரு உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் காளைச் சண்டைகள் பல்வேறு வடிவங்களில் இப்போதும் நடத்தப்பட்டு வருகின்றன. ஸ்பெயினில் சண்டைக்குப் பயன்படுத்தப்படும் காளையை இறுதியில் ரத்தம் சொட்டச் சொட்ட கொன்று விடுவார்கள். சில நாடுகளில் காளைச் சண்டைக்கு ஒழுங்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. 

ஸ்பெயினில் நடத்தப்படும் காளைச் சண்டையில் ஈடுபடுத்தப்படும் காளைகள் தனிரகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. வனத்தில் வளர்வது போன்ற சூழலில் அவை வளர்க்கப்படுகின்றன. ஐரோப்பாவில் தென்மேற்கு பகுதியிலும் பிரான்ஸ், லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பிற பகுதிகளிலும் மிகப் பிரமாண்டமான காளைச் சண்டை மைதானங்கள் இருந்தன. வரலாற்று பெருமைப் பெற்ற இந்த மைதானங்களில் மெக்சிகோவிலுள்ள பிளாசா மெக்சிகோ என்ற மைதானம் மிகப் பெரியது. ஒரே நேரத்தில் 48 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இந்த மைதானம் இப்போதும் இருக்கிறது.

ஸ்பெயினிலுள்ள சலமான்கா மற்றும் மலாக்கா ஆகிய மாநிலங்களில் உள்ள சில மைதானங்கள் மிகவும் பழமையானவை என்று கருதப்படுகிறது. 

காளைச் சண்டைகளின் மூலவேர் மெசபடோமியா மற்றும் மத்திய தரைக்கடல் பிரதேசங்களில் மையம் கொண்டிருக்கிறது. முதல் காளைச் சண்டை மெசபடோமியாவில் இயற்றப்பட்ட புராண காவியமான கில்காமேஷ் என்ற கவிதை வடிவ இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது. கி.மு.2100களில் உருக் என்ற அழைக்கப்பட்ட கிரேக்கப் பிரதேசத்தை ஆண்ட மன்னன் கில்காமேஷ் என்பவரை பற்றிய இலக்கியம் இது. 

இந்த புராணத்தில் சொர்க்கம் என்று அழைக்கப்பட்ட காளையை கில்காமேஷ் மற்றும் என்கிடு என்ற இருவர் போராடி கொல்வதாக கூறப்பட்டிருக்கிறது. 

இது தவிர புராதன கிரேக்கத்தின் புராண இதிகாசங்களில் காளைச் சண்டைகள் சித்தரிக்கப்பட்டு உள்ளன. மாடுகளை தெய்வமாக வணங்குவதும் அவற்றை பலியிடுவதும் தொடக்கக்கால மெசபடோமிய நாகரிகத்தில் வழக்கமாக இருந்திருக்கிறது. மித்ரா என்று அழைக்கப்பட்ட கிரேக்க கடவுள் வழிபாட்டில் காளைகளை கொல்வது முக்கியமான நிகழ்வாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஸ்பெயினில் இதுபோன்ற காளைச் சண்டைகள் குறித்த குகை ஓவியங்கள் ஏராளமாக காணப்படுகின்றன. 

ரோமானிய வரலாற்றில் காளைச் சண்டைகள் தவிர்க்க முடியாத அம்சமாக இடம் பெறுகின்றன. விலங்குகளுடன் மனிதர்கள் மோதும் விளையாட்டு போட்டிகளாவும் பொழுதுபோக்கு விளையாட்டுகளாகவும் நடத்தப்பட்டு வந்தன. 

இங்கிருந்து இந்த வேட்டை விளையாட்டுகள் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா உள்ளிட்ட பிரதேசங்களுக்கு பரவியது. 

https://www.uthayamugam.com/2024/01/1.html

https://www.uthayamugam.com/2024/01/2.html

Previous Post Next Post

نموذج الاتصال