உன் கண்கள் என் கண்களை உண்டபோது... - சகாய டர்சியூஸ்



காதலுடன் காதலை அணைத்து  

காதலால் காதலை கொண்டாடும் 

நந்நாள் காதலர்நாள்... 

இந்நாளில் என் காதலுக்கு ஓர் மடல்...


ஓர் அழகான மாலை இதமான காற்று 

முதன் முதலாய் உன்னைப் பார்த்தேன்! 

முதற்பார்வையிலே காதல் பிறப்பதுண்டு 

கவிதைகளில் படித்திருந்தேன்... 

முதன் முதலாய் உன் கண்கள் 

என் கண்களை உண்டபோது 

காதலின் பிறப்பை முழுதாய் அனுபவித்தேன்...

அன்றிலிருந்து தொடங்கியது 

உனக்கான என் காதல் பயணம்! 


உன்னைக் கண்ட நாள் முதல்  

என் உலகம் உன்னால் மாறியது

உனக்கான காத்திருப்புகளில் 

காற்றும் உன் பெயர் சொல்லும்! 

மரங்களும் என்னோடு கவிபாடும்!

நீ நடந்துவரும் பாதையில் 

இதயம் பூக்களை விரித்துப் பார்த்திருக்கும்! 

உன் நடையின் சப்தங்கள் 

என் சோகங்கள் மறைக்கும் நல்லிசையாகும்...


உன் மீது உள்ள என் காதலை 

வார்த்தைகளில் எப்படி விளக்குவேன்?

உன் அழகு, உன் அன்பு, உன் பாசம் 

என் மொழிக்கும் அப்பால்...

உன்கண்களில் ஒளிரும் எனக்கான அன்பு...

உன் சிரிப்பில் மறைந்திருக்கும் அழகு... 

காதல் காய்ச்சலில் தவிக்க 

மீட்டெடுக்கும் உன் அணைப்பு...

உன்னுடனான ஒவ்வொரு தருணமும்

என் வாழ்வில் அழகிய காவியமே...


உன்னோடு சேர்ந்திருக்கும் 

நாட்கள் வரமாகுது... 

நீ அருகில் இல்லாத 

என் நாட்கள் நீளமாகுது... 

கைபேசியில் உன் குரல் கேட்கும் 

நொடியில்தான் தனிமை தூரமாகுது... 


இந்த காதலர்தினத்தில் 

உன் அன்பினை சுவாசித்து சொல்கிறேன் 

நீயே என்உயிரின் சுவாசம்... 

உனக்காகவே என் இதயத்தின் இயக்கம்... 

நீ என்னில் மட்டுமல்ல 

என் ஆன்மாவிலும் கலந்த காதலி...

நீ என் வாழ்க்கையின் கவிதை...

என்றென்றும் உன்னை காதலிக்கும் காதலன் நான்..! 

    - சகாய டர்சியூஸ் பீ

Previous Post Next Post

نموذج الاتصال